திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.1 திருவதிகை வீரட்டானம்
பண் - கொல்லி
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
    கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
1
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
    நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
    நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
2
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
    படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
    பெற்றமேற்றுகந் தீர்சுற்றும்
டயிந்தீரடி கேள்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
3
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
    முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
    தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
4
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
5
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
    உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
6
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
    ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
    வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் கம்படியே
    பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
7
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
    வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
    சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
    கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
8
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
    புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
    நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலி ளும்மை இனித்தெளியார்
    அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
9
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
    புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
    அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
    என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.
10
இப்பதிகம் சூலைநோய் தீர ஓதியருளியது.
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.2 திருக்கெடிலவடவீரட்டானம் (திருவதிகை வீரட்டானம்)
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
    சுடர்த் திங்கட் சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
    வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
    அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
1
பூண்டதோர் கேழல் எயிறும்
    பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து
    நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங்
    கலந்தகட் டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
2
ஒத்த வடத்திள நாகம்
    உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
    முளைத்தெழு மூவிலை வேலுஞ்
(*)சித்த வடமும் அதிகைச்
    சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.

(*) சித்தவடம் என்பது இத்தலத்துக்கு அருகில் இருக்கிறது.
3
மடமான் மறிபொற் கலையும்
    மழுபாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோளுங்
    குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம்
    இருநில னேற்ற சுவடுந்
தடமார் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
4
பலபல காமத்த ராகிப்
    பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங்
    கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும்
    வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
5
கரந்தன கொள்ளி விளக்குங்
    கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும்
    பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர்
    அறியப் படாததோர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
6
கொலைவரி வேங்கை அதளுங்
    குலவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும்
    விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும்
    மணியார்ந் திலங்கு மிடறும்
உலவுகெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
7
ஆடல் புரிந்த நிலையும்
    அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம்
    பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதோர் கூத்தும்
    நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
8
சூழு மரவத் துகிலுந்
    துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச
    அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும்
    விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
9
நரம்பெழு கைகள் பிடித்து
    நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
    ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான்
    வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்புகெடிலப் புனலும்
    உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
    அஞ்ச வருவது மில்லை.
10
இப்பதிகம் சமணர்கள் ஏவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.24 திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை
இரும்புகொப் பளித்த யானை
    ஈருரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொற்
    காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத்
    துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே.
1
கொம்புகொப் பளித்த திங்கட்
    கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை
    வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று
    மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க எய்தார்
    அதிகைவீ ரட்ட னாரே.
2
விடையுங்கொப் பளித்த பாதம்
    விண்ணவர் பரவி யேத்தச்
சடையுங்கொப் பளித்த திங்கட்
    சாந்தவெண் ணீறு பூசி
உடையுங்கொப் பளித்த நாகம்
    உள்குவார் உள்ளத் தென்றும்
அடையுங்கொப் பளித்த சீரார்
    அதிகைவீ ரட்ட னாரே.
3
கறையுங்கொப் பளித்த கண்டர்
    காமவேள் உருவம் மங்க
இறையுங்கொப் பளிதத கண்ணார்
    ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையுங்கொப் பளித்த நாவர்
    வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே.
4
நீறுகொப் பளித்த மார்பர்
    நிழல்திகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதை
    கோள்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாதம்
    இமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே.
5
வணங்குகொப் பளித்த பாதம்
    வானவர் பரவி யேத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச்
    சடையுடைப் பெருமை யண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச்
    சுரிகுழல் பாக மாக
அணங்குகொப் பளித்த மேனி
    அதிகைவீ ரட்ட னாரே.
6
சூலங்கொப் பளித்த கையர்
    சுடர்விடு மழுவான் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பில்
    நுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர்
    வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத்
    ததிகைவீ ரட்ட னாரே.
7
நாகங்கொப் பளித்த கையர்
    நான்மறை யாய பாடி
மேகங்கொப் பளித்த திங்கள்
    விரிசடை மேலும் வைத்துப்
பாகங்கொப் பளித்த மாதர்
    பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொப் பளித்த தோளார்
    அதிகைவீ ரட்ட னாரே.
8
பரவுகொப் பளித்த பாடல்
    பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவுகொப் பளித்த கங்கை
    விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்டர்
    ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
அரவுகொப் பளித்த கையர்
    அதிகைவீ ரட்ட னாரே.
9
தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்
    துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக்
    கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன்
    வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
    கெடிலவீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.25 திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை
வெண்ணிலா மதியுந் தன்னை
    விரிசடை மேவ வைத்து
உண்ணிலாப் புகுந்து நின்றங்
    குணர்வினுக் குணரக் கூறி
விண்ணிலார் மீயச் சூரர்
    வேண்டுவார் வேண்டு வார்க்கே
அண்ணியார் பெரிதுஞ் சேயார்
    அதிகைவீ ரட்ட னாரே.
1
பாடினார் மறைகள் நான்கும்
    பாயிருள் புகுந்தென் உள்ளங்
கூடினார் கூட லாழ
    வாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடன் மேவிச்
    சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
றாடினார் ஆடல் மேவி
    அதிகைவீ ரட்ட னாரே.
2
ஊனையே கழிக்க வேண்டில்
    உணர்மின்கள் உள்ளத் துள்ளே
தேனைய மலர்கள் கொண்டு
    சிந்தையுட் சிந்திக் கின்ற
ஏனைய பலவு மாகி
    இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார்
    அதிகைவீ ரட்ட னாரே.
3
துருத்தியாங் குரம்பை தன்னில்
    தொண்ணூற்றங் கறுவர் நின்று
விருத்திதான் தருக வென்று
    வேதனை பலவுஞ் செய்ய
வருத்தியால் வல்ல மாறு
    வந்துவந் தடைய நின்ற
அருத்தியார்க் கன்பர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே.
4
பத்தியால் ஏத்தி நின்று
    பணிபவர் நெஞ்சத் துள்ளார்
துத்திஐந் தலைய நாகஞ்
    சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர் பாவை
    உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார்
    அதிகைவீ ரட்ட னாரே.
5
விரிமுரி பாடி யென்றும்
    வல்லவா றடைந்து நெஞ்சே
கரியுரி மூட வல்ல
    கடவுளைக் காலத் தாலே
சுரிபுரி விரிகு ழலாள்
    துடியிடைப் பரவை யல்குல்
அரிவையோர் பாகர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே.
6
நீதியால் நினைசெய் நெஞ்சே
    நிமலனை நித்த மாகப்
பாதியாம் உமைதன் னோடும்
    பாகமாய் நின்ற எந்தை
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்
    சுண்ணவெண் ணீற தாடி
ஆதியும் ஈறு மானார்
    அதிகைவீ ரட்ட னாரே.
7
எல்லியும் பகலு மெல்லாந்
    துஞ்சுவேற் கொருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்
    புக்கனர் காம னென்னும்
வில்லிஐங் கணையி னானை
    வெந்துக நோக்கி யிட்டார்
அல்லியம் பழன வேலி
    அதிகைவீ ரட்ட னாரே.
8
ஒன்றவே யுணர்தி ராகில்
    ஓங்காரத் தொருவ னாகும்
வென்றஐம் புலன்கள் தம்மை
    விலக்குதற் குரியீ ரெல்லாம்
நன்றவன் நார ணனும்
    நான்முகன் நாடிக் காண்குற்
றன்றவர்க் கரியர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே.
9
தடக்கையால் எடுத்து வைத்துத்
    தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்க ளோங்கக்
    கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரலான்
    முருகமர் கோதை பாகத்
தடக்கினார் என்னை யாளும்
    அதிகைவீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.26 திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை
நம்பனே எங்கள் கோவே
    நாதனே ஆதி மூர்த்தி
பங்கனே பரம யோகி
    என்றென்றே பரவி நாளுஞ்
செம்பொனே பவளக் குன்றே
    திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே அலந்து போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
1
பொய்யினால் மிடைந்த போர்வை
    புரைபுரை அழுகி வீழ
மெய்யனாய் வாழ மாட்டேன்
    வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன
    சேவடி இரண்டுங் காண்பான்
ஐயநான் அலந்து போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
2
நீதியால் வாழ மாட்டேன்
    நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்
    உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன்
    தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
3
தெருளுமா தெருள மாட்டேன்
    தீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே அழுந்தி நாளும்
    போவதோர் நெறியுங் காணேன்
இருளமா மணிகண் டாநின்
    இணையடி இரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டும்
    அதிகைவீ ரட்ட னாரே.
4
அஞ்சினால் இயற்றப் பட்ட
    ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்
    குரிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணங்
    காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி
    அதிகைவீ ரட்ட னாரே.
5
உறுகயி றூசல் போல
    ஒள்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல
    வந்துவந் துலவு நெஞ்சம்
பெருகயி றூசல் போலப்
    பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
6
கழித்திலேன் காம வெந்நோய்
    காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி
    உணர்வெனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற
    வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
7
மன்றத்துப் புன்னை போல
    மரம்படு துயர மெய்தி
ஒன்றினால் உணர மாட்டேன்
    உன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து
    கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான் அலமந் திட்டேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
8
பிணிவிடா ஆக்கை பெற்றேன்
    பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
    பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
    தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
9
திருவினாள் கொழுந னாருந்
    திசைமுக முடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்
    இணையடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே
    உன்திருப் பாதங் கண்பான்
அருவனே அருள வேண்டும்
    அதிகைவீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.27 திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை
மடக்கினார் புலியின் தோலை
    மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்
    மொய்சடைக் கற்றை தன்மேல்
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த்
    துடியிடைப் பரவை யல்குல்
அடக்கினார் கெடில வேலி
    அதிகைவீ ரட்ட னாரே.
1
சூடினார் கங்கை யாளைச்
    சூடிய துழனி கேட்டங்
கூடினாள் நங்கை யாளும்
    ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்
    பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி
    அதிகைவீ ரட்ட னாரே.
2
கொம்பினார் குழைத்த வேனற்
    கோமகன் கோல நீர்மை
நம்பினார் காண லாகா
    வகையதோர் நடலை செய்தார்
வெம்பினார் மதில்கள் மூன்றும்
    வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார் கெடில வேலி
    அதிகைவீ ரட்ட னாரே.
3
மறிபடக் கிடந்த கையர்
    வளரிள மங்கை பாகஞ்
செறிபடக் கிடந்த செக்கர்ச்
    செழுமதிக் கொழுந்து சூடி
பொறிபடக் கிடந்த நாகம்
    புகையுமிழந் தழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலுங்
    கெடிலவீ ரட்ட னாரே.
4
நரிவரால் கவ்வச் சென்று
    நற்றசை இழந்த தொத்த
தெரிவரால் மால்கொள் சிந்தை
    தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
வரிவரால் உகளுந் தெண்ணீர்க்
    கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த
    அதிகைவீ ரட்ட னாரே.
5
புள்ளலைத் துண்ட ஓட்டில்
    உண்டுபோய் பலாசங் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீ
    றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
துள்ளலைப் பாகன் றன்னைத்
    தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
அள்ளலைக் கடப்பித் தாளும்
    அதிகைவீ ரட்ட னாரே.
6
நீறிட்ட நுதலர் வேலை
    நீலஞ்சேர் கண்டர் மாதர்
கூறிட்ட மெய்ய ராகிக்
    கூறினார் ஆறும் நான்குங்
கீறிட்ட திங்கள் சூடிக்
    கிளர்தரு சடையி னுள்ளால்
ஆறிட்டு முடிப்பர் போலும்
    அதிகைவீ ரட்ட னாரே.
7
காணிலார் கருத்தில் வாரார்
    திருத்தலார் பொருத்த லாகார்
ஏணிலார் இறப்பும் இல்லார்
    பிறப்பிலார் துறக்க லாகார்
நாணிலார் ஐவ ரோடும்
    இட்டெனை விரவி வைத்தார்
ஆணலார் பெண்ணும் அல்லார்
    அதிகைவீ ரட்ட னாரே.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
தீர்த்தமா மலையை நோக்கிச்
    செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப்
    பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ்
    சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார்
    அதிகைவீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.28 திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை
முன்பெலாம் இளைய காலம்
    மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண இருமி நாளுங்
    கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்கல் அட்டும்
    பேதைமார் போன்றேன் உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
1
கறைப்பெருங் கண்டத் தானே
    காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலைக் கண்டேன்
    நீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே
    பிஞ்ஞகா இவைய னைத்தும்
அறுப்பதோர் உபாயங் காணேன்
    அதிகைவீ ரட்ட னாரே.
2
நாதனா ரென்ன நாளும்
    நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார்
    இணையடி தொழுதோம் என்பார்
ஆதனா னவனென் றெள்கி
    அதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும்
    பழவினைப் பரிசி லேனே.
3
சுடலைசேர் சுண்ண மெய்யர்
    சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர்
    பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி
    அதனிடை மணிகள் சிந்துங்
கெடிலவீ ரட்ட மேய
    கிளர்சடை முடிய னாரே.
4
மந்திர முள்ள தாக
    மறிகட லெழுநெய் யாக
இந்திரன் வேள்வித் தீயில்
    எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
சிந்திர மாக நோக்கித்
    தெருட்டுவார் தெருட்ட வந்து
கந்திரம் முரலுஞ் சோலைக்
    கானலங் கெடிலத் தாரே.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
மைஞ்ஞல மனைய கண்ணாள்
    பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
    விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு
    காதலால் இனிது சொன்ன
கின்னரங் கேட்டு கந்தார்
    கெடிலவீ ரட்ட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.105 திருவதிகை வீரட்டானம் - திருவிருத்தம்
மாசிலொள் வாள்போல் மறியும்
    மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை
    அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய
    வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்
    தேயெந்தை வீரட்டமே.
1
பைங்காற் றவளை பறைகொட்டப்
    பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமேல் ஆவி
    உயிர்ப்ப அருகுலவுஞ்
செங்காற் குரகிவை சேருஞ்
    செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீரன்
    அருள்வைத்த வீரட்டமே.
2
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்
    செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு
    மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிற்கிரங் கார்தடந்
    தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத்
    தேயெந்தை வீரட்டமே.
3
மீனுடைத் தண்புனல் வீரட்ட
    ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள
    தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்
    கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப்
    போதுங் குறிக்கொண்மினே.
4
ஆரட்ட தேனும் இரந்துண்
    டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற
    தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச்
    சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா
    வரும்பாவ வேதனையே.
5
படர்பொற் சடையும் பகுவாய்
    அரவும் பனிமதியுஞ்
சுடலைப் பொடியு மெல்லா
    முளவேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட
    ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்
    டீரவர் நாமங்களே.
6
காளங் கடந்ததோர் கண்டத்த
    ராகிக் கண்ணார்கெடில
நாளங் கடிக்கோர் நகரமு
    மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு
    மியாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்
    வாரவர் வீரட்டரே.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com